கணவரை பிரிந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தடுக்க சென்ற பெற்றோர் மீது தாக்குதல்


கணவரை பிரிந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை - தடுக்க சென்ற பெற்றோர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 31 Jan 2024 2:28 PM GMT (Updated: 31 Jan 2024 3:17 PM GMT)

இந்த சம்பவம் குறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூசி,

செய்யாறு அருகே குண்ணவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அவரை பிரிந்து தனது தாய் வீடான குண்ணவாக்கம் கிராமத்தில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு அதே கிராமத்தை சேர்ந்த உறவினரான டிரைவர் மண்ணு என்பவர் அடிக்கடி வந்து செல்வார். அப்போது அவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெண்ணும், அவரது பெற்றோரும் கண்டித்து உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி அதிகாலை மதுபோதையில் இருந்த மண்ணு, பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாகத் தெரிகிறது. அப்போது வீட்டில் இருந்த பெண்ணின் பெற்றோர் அவரை கடுமையாக எச்சரித்து உள்ளனர். அதனால் ஆத்திரம் அடைந்த மண்ணு, அவர்களை தாக்கி விட்டு தப்பியோடி விட்டார்.

இதில் படுகாயம் அடைந்த பெண்ணின் பெற்றோர் காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தூசி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து டிரைவர் மண்ணுவை தேடி வருகின்றனர்.


Next Story