வெள்ளியங்கிரியில் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர் - பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்


வெள்ளியங்கிரியில் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர் - பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்
x
தினத்தந்தி 6 Feb 2024 4:04 PM GMT (Updated: 6 Feb 2024 5:02 PM GMT)

பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை 'தென் கைலாயம்' என்று அழைக்கப்படும் ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. மேகங்கள் சூழ, வெள்ளியால் மூடியது போல தோற்றமளிப்பதால் இது வெள்ளியங்கிரி என்ற பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

வெள்ளியங்கிரி மலைக்கு கோவை மட்டுமின்றி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் சித்ரா பவுர்ணமி வரை கோவிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு பக்தர்கள் மலையேற்றத்திற்கு வனத்துறை தடை விதித்தது.

இந்த நிலையில் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிற்கு அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தற்சமயம் பிப்ரவரி மாதம் என்பதால் பல்வேறு பகுதியிலிருந்து வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர் என்றும், ஆனால், தற்பொழுது பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படாததால் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களை மலை எற அனுமதிக்கவும், அவர்களுக்கு தேவையான உதவிகளையும் பாதுகாப்புகளையும் வனத்துறை சார்பில் அளித்திட வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.


Next Story