சிப்காட், டிட்கோ நிறுவன திட்டப்பணிகள்: தலைமைச் செயலாளர் ஆய்வு


சிப்காட், டிட்கோ நிறுவன திட்டப்பணிகள்: தலைமைச் செயலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Jun 2023 6:18 AM GMT (Updated: 5 Jun 2023 6:24 AM GMT)

சிப்காட், டிட்கோ நிறுவனங்களின் திட்டப்பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.

சென்னை

இறையன்பு ஆய்வு

தமிழ்நாடு அரசு தொழில் முதலீட்டு, ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறையின் சிப்காட் மற்றும் டிட்கோ நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நந்தம்பாக்கத்தில் டிட்கோ மூலம் மேற்கொள்ளப்படும் சென்னை வர்த்தக மைய விரிவாக்கப்பணிகள், மாநாட்டு அரங்கம் மற்றும் 5 பொருட்காட்சி அரங்கங்கள், பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றின் கட்டுமானப்பணிகளை அவர் பார்வையிட்டார். இந்த கட்டுமான பணிகளை உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு முன்னர் முழுவதுமாக முடிக்க அவர் அறிவுறுத்தினார்.

சிப்காட் மூலம் காஞ்சிபுரம் மாவட்டம் வல்லம் வடகாலில் ரூ.680 கோடியில் கட்டப்பட்டுவரும் ஒருங்கிணைந்த பணியாளர் விடுதியை இறையன்பு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

தொழில்பூங்கா

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழில்பூங்காவை பார்வையிட்ட பின்னர், மாம்பாக்கத்தில் ரூ.16.45 கோடியில், தொழில் தொடங்குவோர் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் பயன்பாட்டுக்காக ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ள சிப்காட் தொழில் புத்தாக்க மையத்தை ஆய்வு செய்தார்.

இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ள உடன் பணிபுரியும் இடம், தொழில் உபகரணங்கள், தயாரிப்புகள் மேம்பாட்டு மையம், முன்மாதிரி தயாரிப்பு வசதி மற்றும் பயிற்சி மையம் போன்றவை குறித்து ஆய்வு செய்து, சிறந்த முறையில் பராமரிக்க கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, பட்டாபிராமில் டிட்கோ மூலம் ரூ.327 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் டைடல் தொழில்நுட்ப பூங்காவை இறையன்பு ஆய்வு செய்தார். அங்கு கட்டப்படும் தகவல் தொழில்நுட்ப பூங்கா, 2 உணவக கட்டிடம் ஆகிய கட்டுமான பணிகளை துரிதமாக முடிக்கும்படி கூறினார்.

இந்த ஆய்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், டிட்கோ மேலாண்மை இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன், சிப்காட் மேலாண்மை இயக்குனர் சுந்தரவல்லி, டைடல் பூங்கா மேலாண்மை இயக்குனர் மரியம் பல்லவி பல்தேவ், சிப்காட் செயல் இயக்குனர் நிஷாந்த் கிருஷ்ணா, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story