வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்


வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
x

நரிக்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டத்தை ரத்து செய்த வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டத்தை ரத்து செய்த வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.

யூனியன் கூட்டம்

நரிக்குடி யூனியனில் 14 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இந்தநிலையில் 3 கவுன்சிலர்கள் தொடர்ந்து 3 யூனியன் கூட்டங்களுக்கு வராததால் அந்த கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் யூனியன் கவுன்சிலர் கூட்டம் நடைபெற உள்ளதாக 15 நாட்களுக்கு முன்பு யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் தபால் அனுப்பியுள்ளார். கவுன்சிலர்கள் கூட்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி நரிக்குடி போலீஸ் நிலையத்தில் யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் மற்றும் துணைத்தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க கோரி மனு அளித்திருந்தனர்.

உள்ளிருப்பு போராட்டம்

இந்தநிலையில் திடீரென வட்டார வளர்ச்சி அலுவலர் பிரின்ஸ், யூனியன் கூட்டத்தை ரத்து செய்தார் என்று யூனியன் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் அறிவிக்கப்பட்டபடி கூட்டம் நடத்துவதற்காக யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் தலைமையில் கவுன்சிலர்கள் வந்த போது கூட்ட அரங்கு திறக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து யூனியன் தலைவர் பஞ்சவர்ணம், யூனியன் துணைத்தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர்கள் 3 பேர் உள்பட மொத்தம் 5 பேர் நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் எந்த அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தாததால் தலைமையிடம் உத்தரவு பெற்று போராட்டம் தொடரும் என்று தெரிவித்துவிட்டு உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன், நரிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமநாரயணன் ஆகியோர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் நரிக்குடி யூனியன் அலுவலகத்தில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.


Next Story