குறுஞ்செய்தி கட்டணம், குறைந்தபட்ச இருப்பு:உரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்வதா?இல்லத்தரசிகள் ஆவேசம்


குறுஞ்செய்தி கட்டணம், குறைந்தபட்ச இருப்பு:உரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்வதா?இல்லத்தரசிகள் ஆவேசம்
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:45 PM GMT)

குறுஞ்செய்தி கட்டணம், குறைந்தபட்ச இருப்புக்காக உரிமைத்தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்வதா என்பது குறித்து இல்லதரசிகன் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

தேனி


கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் மூலம் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. அண்ணா பிறந்தநாளான கடந்த 15-ந் தேதி, காஞ்சீபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதன் மூலம் மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர்களுக்கு தலா ரூ. 1,000 வீதம் வங்கிகள் மூலம் அனுப்பப்பட்டது.

இதுகுறித்த தகவல்கள் பயனாளர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. இதனை பார்த்ததும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சில பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதற்கு காரணம், அவர்கள் வங்கிக் கணக்குகளில் அரசு போட்ட ரூ.1,000-ல் இருந்து பல்வேறு காரணங்களுக்காக சிறிய தொகை பிடித்தம் செய்யப்பட்டு இருந்தது. வங்கிகள் இவ்வாறு பிடித்தம் செய்வது சரியல்ல. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் ஆவேசம் அடைந்து இருக்கிறார்கள்.

இதுகுறித்து இல்லத்தரசிகள், வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகி கூறிய கருத்துகள் பின்வருமாறு:-

ஏற்க முடியாது

கூடலூரை சேர்ந்த இல்லத்தரசி கிருஷ்ணவேணி கூறும் போது, 'பெண்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பமாக தமிழ்நாடு அரசு கலைஞர் உரிமைத் தொகை என்று மாதம் தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. இந்தத் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் போடப்படுகிறது. இந்தத் தொகையை வங்கிகள் ஏற்கனவே வாங்கிய கடன், குறுஞ்செய்தி உள்ளிட்ட சேவைக் கட்டணம் என்று ரூ.100, ரூ.200 என்று பிடித்தம் செய்வதை ஏற்க முடியாது.

வங்கிகளுக்கு பிடித்தம் செய்து பழக்கப்பட்டு இருப்பதால் உடனடியாக எந்த திட்டத்தின் கீழ் பணம் போடப்பட்டாலும் உடனடியாக பிடித்தம் செய்கின்றனர். இது சரியான அணுகுமுறை இல்லை. வரும் காலங்களில் வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து அவர்களுடைய அனுமதி இல்லாமல் எந்த தொகையையும் பிடித்தம் செய்யக் கூடாது என்று விதிகளை மாற்ற வேண்டும். மேலும் மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகள் அனைவரின் வங்கிக் கணக்குகளையும் குறைந்தபட்ச இருப்பு வைக்க வேண்டும் என்ற கணக்காக இல்லாமல், ஜீரோ பேலன்ஸ் கணக்குகளாக மாற்ற வேண்டும்' என்றார்.

ஒத்துழைப்பு அவசியம்

கடமலைக்குண்டு மூலக்கடையை சேர்ந்த இல்லத்தரசி சுதா கூறும் போது, 'முதல்-அமைச்சர் எங்களுடைய நலனுக்காக ஒரு சிறந்த திட்டத்தை அமல்படுத்தி உள்ளார். இந்த திட்டத்தில் எந்த முறைகேடுகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகத் தொகையை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளார். ஆனால் இடையில் வங்கி நிர்வாகம் அந்தக் கட்டணம், இந்தக் கட்டணம் என்று கூறி அரசு செலுத்தும் தொகையில் இருந்து பிடித்தம் செய்வது சரியில்லை.

அரசு எவ்வளவு செலுத்துகிறதோ அவ்வளவு தொகையையும் அப்படியே பயனாளர்களிடம் வழங்க வேண்டும். அத்துடன் இந்தத் திட்ட பயனாளிகளுக்கு குறைந்தபட்ச இருப்பு என்பது வேண்டாம், எவ்வளவு தொகை வேண்டுமானாலும் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்று வங்கிகள் அறிவிக்க வேண்டும். அரசினுடைய நல்ல திட்டத்தை திறம்பட நடத்திச் செல்ல வங்கிகளின் முழு ஒத்துழைப்பும் அவசியம்' என்றார்.

திருப்பி கொடுக்க வேண்டும்

உத்தமபாளையத்தைச் சேர்ந்த இல்லத்தரசி லீலாவதி ஜெகதீஸ்வரன் கூறும் போது, 'விலைவாசி உயர்வு காரணமாக, மாதச் சம்பளம் வாங்குபவர்களின் வங்கிக் கணக்கு கூட மாதக் கடைசியில் குறைந்தபட்ச இருப்பு இல்லாத நிலை இருக்கிறது. அன்றாடம் கூலிவேலை செய்து பிழைக்கும் ஏழை, எளிய மக்கள் தங்களின் வங்கிக் கணக்கில் ரூ.100 இருந்தால் கூட அவசர தேவைக்கு எடுத்து விடும் நிலையில் தான் வாழ்கிறார்கள். பலரும் சிலிண்டர் மானியம் கிடைக்கும் என்பதற்காக தான் வங்கிக் கணக்கு தொடங்கி இருந்தார்கள்.

சில ஆண்டுகளாக மானியம் கிடைக்காததால் வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இன்றி இருந்தது. தற்போது மகளிருக்கு தமிழக அரசு கொடுக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டவுடன், வங்கி நிர்வாகம் சில காரணங்களுக்காக குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. எனவே வங்கிகள் பிடித்தம் செய்த தொகையை திருப்பிக் கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதுபோன்று பிடித்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்' என்றார்.

தவறான நடவடிக்கை

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தில் மாநில பொதுச் செயலாளர் டி.ரவிகுமார் கூறும் போது, 'தமிழ்நாடு அரசு ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் இந்தப் பணத்தை பெண்கள் எடுக்க முயலும் போது பலவிதமான பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக கணிசமான எண்ணிக்கையிலான பெண்களின் கணக்குகளில் இருந்து அவர்களுக்கு சேர வேண்டிய ஆயிரம் ரூபாயில் பெரும்பாலான தொகையோ, முழுவதுமோ அபராதத் தொகையாக பிடித்தம் செய்யப்பட்டு இருக்கிறது.

இது முழுவதும் தவறான நடவடிக்கையாகும். 2018-ம் ஆண்டு முதல் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.35 ஆயிரம் கோடி சாமானிய மக்களிடம் இருந்து அபராதக் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் நிதி அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கிகள் உடனடியாக இந்த நலத் திட்டத்தில் இருந்து பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும். அரசு அறிவித்துள்ள இந்த நலத் திட்டம் முழுமையாக உரியவருக்குச் செல்ல வங்கிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

வங்கிக் கணக்கு மாற்றப்படும்

தமிழக அரசு அதிகாரிகள் கூறும் போது, 'கலைஞர் உரிமைத் தொகை பயனாளர்கள் பெற்ற கடன் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பியதற்கான கட்டணம் உள்ளிட்ட சேவை கட்டணம், வங்கி கணக்கில் குறைந்த பட்ச இருப்பு இல்லாதது போன்ற காரணத்திற்காக சிலருடைய கணக்குகளில் பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசு சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

இதனையும் மீறி வங்கிகள் பயனாளர்களின் கணக்கில் இருந்து பணத்தை பிடித்தம் செய்தால் பயனாளர்களின் கணக்கு பரிவர்த்தனைகள் வேறு வங்கிக்கு மாற்றம் செய்யப்படும். இதுதொடர்பாக பாதிக்கப்படும் இல்லத்தரசிகள், முதல்வரின் முகவரி உதவி மையத்தின் எண் 1100-ல் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


Related Tags :
Next Story