சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கிய வீரர்கள்


சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கிய வீரர்கள்
x

நடுவலூரில் ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கிய வீரர்கள் பரிசுகளை அள்ளிச்சென்றனர்.

அரியலூர்

உடையார்பாளையம்

ஜல்லிக்கட்டு

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள நடுவலூர் கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் மதுரை, தஞ்சாவூர், கரூர், கடலூர், திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், சேலம், புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள், சில்வர் அண்டா, கட்டில், மின்விசிறி என பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. முன்னதாக வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை பிடிக்க முயன்ற திருச்சியை சேர்ந்த சிவராம்(வயது 24), வரதராஜன்(32), கல்லங்குறிச்சியை சேர்ந்த அஜித்குமார்(27), மீன்சுருட்டியை சேர்ந்த தமிழ்செல்வன்(36) உள்பட 24 பேர் லேசான காயமடைந்தனர். அரசு அனுமதியுடன் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டை அரியலூர் எம்.எல்.ஏ. கு.சின்னப்பா மற்றும் உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டில் காயம் அடைந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. முன்னதாக போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பிறகே ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜல்லிக்கட்டை காண்பதற்காக நடுவலூர், கோட்டியால், பாண்டி பஜார் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்த ஜல்லிக்கட்டிற்கான ஏற்பாடுகளை நடுவலூர் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி குழுவினர் செய்திருந்தனர்.


Next Story