ஊத்துக்கோட்டை அருகே சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன் கைது


ஊத்துக்கோட்டை அருகே சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன் கைது
x

ஊத்துக்கோட்டை அருகே சொத்து தகராறில் தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டார். வீட்டில் தவறி விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடியது அம்பலமானது.

திருவள்ளூர்

சொத்து தகராறு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள காக்காவக்கத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது70). இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி தனலட்சுமி இறந்து விட்டார். இவருக்கு ஆதிசேஷன் (50) என்ற மகன் உள்ளார். சுப்ரமணி வசந்தா என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ராமமூர்த்தி (45) என்ற மகனும் ஜெயம்மாள் (40) என்ற மகளும் உள்ளனர். சுப்ரமணி தனது முதல் மனைவி மகன் ஆதிசேஷனுக்கு ஒரு ஏக்கர் நிலம் வழங்கியுள்ளார். இதனை 2-வது மனைவியின் மகன் ராமமூர்த்தி கண்டித்தார். இது குறித்து சுப்பிரமணி, ராமமூர்த்தி இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

அடித்து கொலை

இதனிடையே கடந்த 7-ந்தேதி இரவு சுப்பிரமணி திடீரென்று இறந்து விட்டார். வீட்டில் உள்ள படிகளில் ஏறிய போது தவறி விழுந்து இறந்து விட்டதாக ராமமூர்த்தி கூறவே உறவினர்கள் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக ஊத்துக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் சுப்ரமணி அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

கைது

இதனை தொடர்ந்து போலீசார் சந்தேகத்தின் பேரில் ராமமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தினர். சொத்து தகராறில் தந்தை சுப்ரமணியை உருட்டு கட்டையால் தலையில் அடித்து கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். தந்தையை கொலை செய்து வீட்டில் தவறி விழுந்து இறந்து விட்டதாக நாடகம் ஆடியது அம்பலமானது.

போலீசார் ராமமூர்த்தியை கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story