நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்


நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
x

நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அரியலூர்

தா.பழூர்:

கோவில்களில் நடராஜ பெருமானுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6 நாட்கள் மட்டுமே சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் ஆனி மாதம் வரும் ஆனி திருமஞ்சனம் மற்றும் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் ஆகிய நாட்களில் நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் ஆவணி மாதம் நடராஜருக்கு நடைபெறும் அபிஷேகமும் சிறப்பு வாய்ந்தது. அதன்படி ஆவணி மாத சதுர்த்தசியை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் உள்ள நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், நடராஜர் மற்றும் சிவகாமி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நடராஜ பெருமான், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதைத்தொடர்ந்து நடராஜ பெருமான், சிவகாமி அம்மன் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம், நடராஜப் பத்து முழங்க சோடச உபசாரங்கள் செய்யப்பட்டன. மங்கல இசை, ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.


Next Story