பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 24 Sep 2022 6:45 PM GMT (Updated: 24 Sep 2022 6:46 PM GMT)

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கரிவரதராஜ பெருமாள்

புரட்டாசி மாதம் இந்துக்களின் புனித மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த மாதம் இறைச்சி வகைகளை சாப்பிடுவதை தவிர்த்து பக்தர்கள் விரதம் இருப்பார்கள். மேலும் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதால் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். நேற்று புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

இதையொட்டி பொள்ளாச்சி கடை வீதி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து பெருமாளுக்கு பால், சந்தனம் உள்பட பல்வேறு வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். மேலும் மாலை 5 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வந்தார்.

ஆஞ்சநேயர் கோவில்

சோமந்துறைசித்தூரில் உள்ள பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொள்ளாச்சி-பாலக்காடு லட்சுமி நரசிம்மர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமையொட்டி காலை 6 மணிக்கு மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் பக்தர்களுக்கு பிரசாரம் வழங்கப்பட்டது.


Next Story