விழுப்புரம் கோவில்களில் சிறப்பு பூஜை

ஆடி மாத 3-ம் வெள்ளியையொட்டி விழுப்புரம் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத 3-ம் வெள்ளிக்கிழமையையொட்டி இன்று காலை 9 மணிக்கு பூந்தோட்டம் ஏரிக்கரையில் கரகம் ஜோடித்து வீதியுலாவும், 1 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
இதையொட்டி பக்தர்கள் கொண்டு வந்திருந்த கூழ், ஒரு கொப்பறையில் ஊற்றி வார்க்கப்பட்டு அம்மனுக்கு படையலிடப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக கூழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு மேல் கும்பம் கொட்டுதலும், 8 மணிக்கு வாண வேடிக்கையுடன் சாமி வீதியுலாவும் நடைபெற்றது.
மகாசக்தி மாரியம்மன்
விழுப்புரம் சாலாமேடு சர்வேயர் நகர், இந்திரா பிரியதர்ஷினி நகரில் உள்ள மகாசக்தி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத 3-ம் வெள்ளியையொட்டி காலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், 10.30 மணிக்கு சக்தி கரகம் புறப்பாடும், மதியம் 1 மணியளவில் சாகை வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு கூழ் படையலிடப்பட்டு மகா தீபாராதனை முடிந்ததும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் இரவு 7 மணிக்கு கும்பம் படைத்தலும், 9 மணிக்கு சர்வ அலங்காரத்துடன் சாமி வீதியுலாவும் நடந்தது.
விழுப்புரம் விராட்டிக்குப்பத்தில் உள்ள நாகம்மன் கோவிலில் காலை 7.30 மணிக்கு மேல் கரகம் பூஜை செய்து மதியம் 1 மணியளவில் சாகை வார்த்தலும், மாலை 5 மணிக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபாடும் நடந்தது. தொடர்ந்து, இரவு 9 மணியளவில் சாமி வீதியுலா நடைபெற்றது.
எடத்தெரு ஏழைமாரியம்மன்
விழுப்புரம் எடத்தெருவில் உள்ள ஏழை மாரியம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
விழுப்புரம் ஊரல் தெருவில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நேற்று பகல் 12 மணியளவில் சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையும் நடந்தது. பின்னர் இரவு 8 மணிக்கு கும்பம் படைத்தலும், 9 மணிக்கு சாமி வீதியுலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் விழுப்புரம் பாப்பான்குளத்தில் உள்ள ஏழை முத்துமாரியம்மன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், 6 மணிக்கு பம்பை நதிக்கரைக்கு கரகம் ஜோடித்தலும், பகல் 12 மணிக்கு கரகம் வீதியுலாவும், மதியம் 1 மணிக்கு சாகை வார்த்தலும், இரவு 8 மணிக்கு கும்பம் படைத்தலும் நடந்தது.






