பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 30 Sep 2023 10:45 PM GMT (Updated: 30 Sep 2023 10:45 PM GMT)

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திண்டுக்கல்

புரட்டாசி சனிக்கிழமை

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி, நேற்று திண்டுக்கல்லில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் மலையடிவாரம் சீனிவாச பெருமாள் கோவிலில் காலை 5 மணி அளவில் திருப்பள்ளி எழுச்சி நடந்தது. அதன்பிறகு சுவாமிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 16 வகையான சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு ராஜ அலங்காரம் நடந்தது. அத்துடன் கோவில் மண்டபத்தில் உற்சவர் சீனிவாச பெருமாளுக்கு ரூபாய் நோட்டுகளால் சொர்ண அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் தீபாராதனை நடைபெற்றது.

அதேபோல் திண்டுக்கல் நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோவிலில் காலை 6 மணிக்கு சுவாமி, தாயார் அம்பாள், ஆஞ்சநேயருக்கு சந்தனம், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது. திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் தென் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.

சிறப்பு வழிபாடு

பின்னர் சுவாமிக்கும், பத்மாவதி தாயார் மற்றும் சீனிவாச பெருமாள் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆஞ்சநேயருக்கு செந்தூர காப்பு அலங்காரமும், பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நத்தம் கோவில்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பாமாருக்மணி சமேத வேணுகோபால சாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது.

இதைத்தொடர்ந்து துளசி, மல்லிகை, ரோஜா உள்ளிட்ட மாலைகளை பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். அதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல், அய்யம்பாளையம் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. சித்தரேவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவில், பட்டிவீரன்பட்டி நரசிங்கபெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

புரட்டாசி மாத 2-வது சனிக்கிழமையையொட்டி நேற்று, பழனி லட்சுமி நாராயண பெருமாள் கோவில், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோவில், கரடிக்கூட்டம் ஸ்ரீஆஞ்சநேயர் கோவில், பாலசமுத்திரம் ரங்கநாத பெருமாள், பாலாறு வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடுகள் நடைபெற்றது.

முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story