பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 7 Oct 2023 6:45 PM GMT (Updated: 7 Oct 2023 6:47 PM GMT)

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெருமாள், நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற பரிமள ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதேபோல் திருவெண்காடு அருகே உள்ள மங்கைமடம் வீர நரசிம்மர் கோவில், திருக்குரவலூர் உக்கிர நரசிம்மர் கோவில், திருநகரி யோக மற்றும் ஹிரண்ய நரசிம்மர், மற்றும் திருவாலி லட்சுமி நரசிம்மர் என பஞ்ச நரசிம்மர் கோவில்களில் வழிபாடுகள் நடந்தன. சீர்காழி அருகே உள்ள வடரங்கம் ரங்கநாதபெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதனைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தலைச்சங்காடு நான் மதிய பெருமாள் கோவில், அண்ணன் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. செம்பனார்கோவில் அருகே மேலப்பாதி இரட்டை ஆஞ்சநேயர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அனைத்து கோவில்களில் நடந்த வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story