பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர்

சிறப்பு அலங்காரம்

புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதனால் பெருமாள் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலையில் உற்வசவர் மதனகோபாலசுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருக்கல்யாண உற்சவம்

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கம்ப பெருமாளுக்கு நேற்று மாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண உற்சவத்தை கண்டுகளித்ததோடு, பயபக்தியுடன் சாமி தரிசனமும் செய்தனர். அவர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

இரவு 7 மணிக்கு மேல் வாணவேடிக்கையுடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி திருவீதி விழாவும் நடந்தது. வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் சுவாமி வீதி உலா நடந்தது.

தங்க கவசம்

இதேபோல் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் முன்பு உள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இரவில் கம்பத்து ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றப்பட்டது. இதே போல் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் மலையில் உள்ள பூ மலை சஞ்சீவிராயருக்கும், மலையடிவாரத்தில் உள்ள வழித்துணை ஆஞ்சநேயருக்கும் நடந்த சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story