முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


தினத்தந்தி 3 Oct 2023 6:45 PM GMT (Updated: 3 Oct 2023 6:45 PM GMT)

புரட்டாசி மாத கார்த்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

சிக்கல்:


சிங்காரவேலர் கோவில்

புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றான சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நேற்று புரட்டாசி மாத கார்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சிங்காரவேலவருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர், திரவிய பொருட்களை கொண்டு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

சிங்கார வேலவர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வாய்மேடு

வாய்மேடு பகுதியில் அமைந்துள்ள பழனி ஆண்டவர் கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகையையொட்டி சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.முன்னதாக முருகனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், திருநீறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வேதாரண்யம்

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுகக் கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை ெசய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இதேபோல் கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு விபூதி அலங்காரம் செய்யப்பட்டது. தோப்புத்துறை கைலாசநாதர்கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story