சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 26 Oct 2023 10:15 PM GMT (Updated: 26 Oct 2023 10:16 PM GMT)

பிரதோஷத்தையொட்டி, சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திண்டுக்கல்

சிறப்பு வழிபாடு

பிரதோஷ நாட்களில், சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி பிரதோஷ நாளான நேற்று திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி காலையில் சுவாமி காளகத்தீசுவரர்-ஞானாம்பிகை, பத்மகிரீசுவரர்-அபிராமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் பிரதோஷ வழிபாடு தொடங்கியது. கோவிலில் உள்ள நந்தி மற்றும் கொடிமரத்துக்கு பால், பழம், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு கோவில் உள் பிரகாரத்தில் சுவாமி 3 முறை வலம் வருதல் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கபாலீஸ்வரர் கோவில்

இதேபோல் திண்டுக்கல் கோபால சமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் உள்ள சிவனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. கோபால்பட்டி கற்பகாம்பாள் சமேத கபாலீஸ்வரர் கோவிலில், கபாலீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது.

வடமதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நேற்று மாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் மீனாட்சி அம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் திருமஞ்சனம் நடந்தது. இதைத்தொடர்ந்து மஞ்சள், சந்தனம், அரிசி மாவு, திருமஞ்சனப்பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், பால், தயிர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

சுந்தரேசுவரரின் எதிரில் வீற்றிருக்கும் நந்தீஸ்வரருக்கும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதன்பின்னர் பெண் பக்தர்கள் விளக்கு ஏற்றி நந்தீசுவரரை வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து உற்சவர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கைலாசநாதர் கோவில்

இதேபோல் நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், இளநீர், தீர்த்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தன. தொடர்ந்து மேளதாளம் முழங்க சாமி புறப்பாடும் நடந்தது.

பின்னர் மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. திண்டுக்கல் நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், காந்திஜி புதுரோடு ஆதிசிவன் கோவில், மலையடிவாரம் ஓதசுவாமிகள் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story