மகா சிவராத்திரி விழாவையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


மகா சிவராத்திரி விழாவையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x

மகா சிவராத்திரி விழாவையொட்டி சிவன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி

மகா சிவராத்திரி விழா

தர்மபுரி பகுதியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை நடைபெற்றது. இதையொட்டி அந்தந்த கோவில்களில் நேற்று முன் தினம் இரவு தொடங்கி விடிய விடிய சாமிக்கு 4 கால சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விடிய விடிய கண் விழித்து சாமி தரிசனம் செய்தனர். ஒவ்வொரு கால பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வழிபாட்டின் போது பக்தர்கள் திருவாசகம் மற்றும் பக்தி பாடல்கள் பாடினர்.

தர்மபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் சாமிக்கு பல்வேறு பழங்கள் மற்றும் நறுமண பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. விடிய விடிய நடந்த இந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி அன்னசாகரம் சாலையில் உள்ள சித்தி லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 4 கால பூஜையின் போது சாமிக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, தயிர் மற்றும் நறுமண பொருட்கள், பழங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

சுயம்பு மாதேஸ்வர சாமி

இதேபோன்று தர்மபுரி வெண்ணாம்பட்டி நந்தி நகரில் உள்ள சுயம்பு மாதேஸ்வர சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 4 கால பூஜையின்போது சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் விடிய விடிய பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தர்மபுரி நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவில், குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவானேஸ்வரர் கோவில், சவுலுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள அருளீஸ்வரர் கோவில், தீர்த்தமலை தீர்த்தகிரிஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேச நாதஸ்வரர் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் மகா சிவராத்திரி விழா சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

பையர்நத்தம்

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பையர்நத்தம் கிராமம் மயிலை மலை பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள அமிர்தேஸ்வரர், அன்னை அமிர்தாம்பிகை கோவிலில் சிவராத்திரியையொட்டி பக்தர்கள் வழிபட்டனர். இதையொட்டி நந்தி பெருமானுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. நந்தி பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், மகா சிவராத்தியையொட்டி நான்கு கால பூஜைகள் நடந்தன. பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நல்லம்பள்ளி அருகே கீழ்பூரிக்கல் கிராமத்தில் உள்ள பெரிய நாயகி உடனுறை கயிலாய நாதர் கோவிலில் சிவராத்திாியையொட்டி நேற்று காலை 6 மணி முதல் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு அலங்கார சேவை, தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கீழ்பூரிக்கல், மேல்பூரிக்கல், ஜருகு, சாமிசெட்டிபட்டி, தொப்பூர், வெள்ளக்கல், நல்லம்பள்ளி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story