கோவில்களில் சிறப்பு வழிபாடு


தினத்தந்தி 5 May 2023 6:45 PM GMT (Updated: 5 May 2023 6:46 PM GMT)

சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சித்ரா பவுர்ணமி

வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை பகுதியில் அமைந்துள்ளது வனதுர்க்கை அம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு புனித நீர் அடங்கிய கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. புனித நீர் அடங்கிய குடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதுபோல் வேதாரண்யம் நகரில் மேல வீதியில் மாணிக்கவாசகர் மடத்தில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் சுவாமிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் மாணிக்கவாசகர் மடம் தர்மகர்த்தா யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவந்தி நாத பண்டார சன்னதி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மவுனமகான் சித்தர் பீடம்

இதுபோல் வேதாரண்யம் வேம்பதேவன்காடு மவுனமகான் சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் சித்தர் பீடத்துக்கு வந்து தியானம் செய்து வழிபாடு நடத்தினர். சித்ராபவுர்ணமியை முன்னிட்டு வேதாரண்யம் சன்னதி கடற்கரையில் கடல் அன்னைக்கு பக்தர்கள் சிறப்பு தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர்.

கோடியக்காடு குழகர் கோவிலில் உள்ள அமிர்தகர சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதை முன்னிட்டு பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்து வந்து சாமிக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வேதாரண்யேஸ்வரர் கோவில்

இதுபோல் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள ஆறுமுகக்கடவுள், மேலகுமரர் மற்றும் நாகை சாலையில் உள்ள பழனியாண்டவர் கோவில், ஆறுகாட்டுத்துறையில் உள்ள முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்ளில் சிறப்பு வழிபாடு நடந்தது.


Next Story