எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம்110 கிலோ மீட்டராக அதிகரிப்பு


எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம்110 கிலோ மீட்டராக அதிகரிப்பு
x

புதுக்கோட்டை வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் 110 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளை (திங்கட்கிழமை) சோதனை ஓட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுக்கோட்டை

எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

புதுக்கோட்டை வழியாக திருச்சி-காரைக்குடி வழித்தடத்தில் அகலரெயில் பாதை சமீபத்தில் மின்மயமாக்கப்பட்டன. இதில் டீசல் என்ஜின்களுக்கு பதிலாக மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால் இந்த வழித்தடத்தில் ரெயில்வே வளர்ச்சியில் மேலும் ஒரு அடையாளமாக மாறியது.

புதுக்கோட்டை வழியாக ராமேசுவரம், தென்மாவட்டங்கள், திருச்சி செல்லும் விரைவு ரெயில்கள் பல இயக்கப்படுகின்றன. இந்த வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகம் 100 கிலோ மீட்டராக உள்ளது. அதாவது ஒரு மணி நேரத்தில் 100 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க கூடிய வகையில் வேகமாக செல்லும். இந்த பாதையில் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

சோதனை ஓட்டம்

இதையடுத்து இந்த வழித்தடத்தில் தண்டவாள பாதைகள் அனைத்தும் ஆராயப்பட்டு மேம்படுத்தப்பட்டன. இதற்காக தண்டவாளங்கள் சீரமைப்பு பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளன.

இந்த நிலையில் திருச்சி-காரைக்குடி ரெயில் பாதையில் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகம் 110 கிலோ மீட்டராக அதிகரிக்க உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இந்த சோதனை ஓட்ட ரெயில் நாளை காலை 9 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும். திருச்சி-புதுக்கோட்டை-காரைக்குடி வழித்தடத்தில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை நடைபெறும். இதில் 40 நிமிடங்களில் 89 கி.மீ. தூரத்தை கடந்து காரைக்குடி சந்திப்பிற்கு 9.40 மணிக்கு செல்லும்.

பயண நேரம் குறையும்

இந்த சோதனை ஓட்டம் வெற்றிபெறும் நிலையில் திருச்சி-புதுக்கோட்டை-காரைக்குடி வழித்தடத்தின் வேகம் 110 கிலோ மீட்டராக உயர்த்தப்படும். இதனால் புதுக்கோட்டைக்கு வந்து செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயண நேரம் சில நிமிடங்கள் குறையவாய்ப்பு உள்ளது.


Next Story