ஆடி மாதத்தையொட்டி பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா: அமைச்சர் சேகர்பாபு


ஆடி மாதத்தையொட்டி பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா: அமைச்சர் சேகர்பாபு
x

ஆடி மாதம் பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டிலுள்ள பிரசித்தி பெற்ற அம்மன் திருக்கோயில்களுக்கு கடந்த ஆண்டைப் போலவே சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து எதிர் வரும் ஆடி மாதம் பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு ஆடி மாதமும் சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து அம்மன் திருக்கோயில்களுக்கு ஆன்மிகச் சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பாரிமுனை அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில், இராயபுரம் அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், திருவொற்றியூர் அருள்மிகு வடிவுடையம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 9 திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கற்பகாம்பாள் திருக்கோயில், மயிலாப்பூர் அருள்மிகு முண்டககண்ணியம்மன் திருக்கோயில், மாங்காடு அருள்மிகு காமாட்சியம்மன் திருக்கோயில், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 10 திருக்கோயில்களுக்கு இரண்டாவதாக ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சிறுவாச்சூர் அருள்மிகு மதுர காளியம்மன் திருக்கோயில், திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளிட்ட 8 திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள புன்னைநல்லூர் அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில், திருக்கருக்காவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில், தஞ்சை அருள்மிகு பெரியநாயகி உடனுறை பிரகதீஸ்வரர் திருக்கோயில் உள்ளிட்ட 10 திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும், மதுரை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயில், மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில், அரியாக்குறிச்சி அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் திருக்கோயில் உள்ளிட 6 திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டமும் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த ஆன்மிகச் சுற்றுலா பக்தர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் மதிய உணவுடன் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பக்தர்களுக்கு கட்டணமில்லா சிறப்பு தரிசனம் செய்து வைக்கப்பட்டு திருக்கோயில் பிரசாதம், திருக்கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும். பக்தர்கள் ஆன்மிகச் சுற்றுலா தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பதிவு செய்திட வேண்டும். மேலும் இது தொடர்பாக www.ttdconline.com என்ற சுற்றுலாத்துறை இணையதளத்திலும், 044 – 25333333, 25333444 என்ற தொலைபேசி எண்களிலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4253 1111 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். ஆகவே, இறையன்பர்கள், சுற்றுலா பயணிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு அம்மன் அருள் பெற்று மனநிறைவு அடையலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


Next Story