பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்


பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
x

பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.

பெரம்பலூர்

கோ-கோ போட்டி

பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் நேற்று பெரம்பலூர் குறுவட்டத்தில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கோ-கோ போட்டிகள் தண்ணீர் பந்தல் இந்திரா நகரில் உள்ள தந்தை ரோவர் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.

போட்டிகளில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த அணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடின. கோ-கோ போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளின் வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி செய்திருந்தது.

உயரம் தாண்டுதல்-ஈட்டி எறிதல்

இதேபோல் ஆலத்தூர் குறுவட்ட அளவில் 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உயரம் தாண்டுதலும், 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயமும், ஈட்டி எறிதலும், கோலூன்றி தாண்டுதலும் தனித்தனியாக பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

போட்டிகளில் முதலிடம் பிடித்தவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி செய்திருந்தது. வருகிற 22-ந்தேதி பெரம்பலூர் குறு வட்டத்திற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கபடி போட்டிகளும், மாணவிகளுக்கு கால்பந்து போட்டிகளும் பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்திலும், 29-ந்தேதி ஆலத்தூர் குறு வட்டத்திற்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தடகள போட்டிகள் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்திலும் நடைபெறவுள்ளது.


Next Story