இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியை "சந்தித்தது உண்மை" - கார் வெடிப்பு விசாரணையில் புதிய தகவல்


இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியை சந்தித்தது உண்மை - கார் வெடிப்பு விசாரணையில் புதிய தகவல்
x

கோவை கார் வெடித்த சம்பவத்தில் அடுத்தடுத்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கோவை

கோவை மாவட்டம், உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி அதிகாலை 4 மணி அளவில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மத்திய அரசு தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான பெரோஸ் ஏற்கனவே கேரளா சிறையில் உள்ளவர்களை சந்தித்து பேசியது விசாரணையில் தெரியவந்தது.

தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கேரளாவில் சிறையில் உள்ள ரசித் அலி மற்றும் முகமது அசாருதீன் போன்றோரை பெரோஸ் சந்தித்து உள்ளார். இதில் அசாருதீன் என்பவர் 2019ல் இலங்கை தேவாலயத் தாக்குதலுக்கு காரணமான அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கைது செய்யப்பட்டவர். மேலும் சிறையில் அவர்களுடனான சந்திப்பில் என்ன நிகழ்ந்தது என பெரோஸிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரோஸ் ஐ.எஸ்.ஐ.எஸ் அனுதாபியாக இருக்கலாம் என கோவை காவல் துறையினர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகை அன்று கிறிஸ்தவ தேவாலயத்தில் ஐ.எஸ். ஆதரவாளர்கள் பயங்கர தாக்குதல் நடத்தினார்கள். கார் வெடிகுண்டு மூலம் நடத்தப்பட்ட இந்த தற்கொலை படை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் இலங்கையையே உலுக்கியது. இலங்கையில் நடைபெற்ற இந்த கார் வெடிகுண்டு தாக்குதல் பின்னணியில் ஜக்ரன் ஹசீம் என்ற பயங்கரவாதிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஜக்ரன் ஹசீமுடன் தொடர்பில் இருப்பவர்கள் யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்தியாவின் தென்மாநிலங்களில் நிறைய பேரிடம் அவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி இருப்பது தெரியவந்தது.

குறிப்பாக முகமது அசாருதீன் என்பவருடன் அவர் அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு பேசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முகமது அசாருதீன் தற்போது கேரளாவில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.


Next Story