ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

சித்திரை தேர்த்திருவிழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. வருகிற 21-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் கொடியேற்றத்தையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தார். பின்னர் காலை 6.30 மணி முதல் 7 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து காலை 7.30 மணிக்கு நம்பெருமாள் கொடிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு காலை 7.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை பேரிதாடனம் நடைபெற்றது.

நெல்லளவு கண்டருளுகிறார்

இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைந்தார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைந்தார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

விழாவின் இரண்டாம் நாளான இன்று மாலை கற்பகவிருட்ச வாகனத்திலும், நாளை(வியாழக்கிழமை) காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 14-ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 15-ந்தேதி காலை சேஷ வாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 16-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 17-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார்.

தேரோட்டம்

18-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. 20-ந் தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, கோவில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Next Story