ஸ்ரீரங்கம் கோவில் தைத்தேரோட்டம் கோலாகலம்


ஸ்ரீரங்கம் கோவில் தைத்தேரோட்டம் கோலாகலம்
x

ஸ்ரீரங்கம் கோவில் தைத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. `ரெங்கா ரெங்கா' கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

திருச்சி

ஸ்ரீரங்கம் கோவில் தைத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. `ரெங்கா ரெங்கா' கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

ரெங்கநாதர்

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் பூபதித்திருநாள் எனப்படும் தைத்தேர் திருவிழா 11 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் உத்திர வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

சிறப்பு நிகழ்ச்சிகளாக கடந்த 29-ந்தேதி தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். நேற்று முன்தினம் மாலை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் கோவில் மண்டபத்தில் காட்சியளித்தார்.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 3.45 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு 4.30 மணிக்கு தைத்தேர் ஆஸ்தான மண்டபம் சேர்ந்தார். காலை 4.30 மணி முதல் காலை 5.15 மணி வரை ரத ரோஹணம் (தனுர் லக்னத்தில்) நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் நம் பெருமாள் உபய நாச்சியார் களுடன் எழுந்தருளிய பின், காலை 6.05 மணிக்கு தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.

அப்போது ஏராளமான பக்தர்கள் ரெங்கா, ரெங்கா என முழங்கியவாறு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் தெற்கு உத்திர வீதியிலிருந்து புறப்பட்டு மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு உத்திர வீதிகளில் வலம் வந்து காலை 9.15 மணிக்கு நிலையை அடைந்தது. பின்னர் தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்து, நெய் விளக்கு, சூடம் ஏற்றி வழிபட்டனர்.

இன்று (சனிக்கிழமை) சப்தாவரணம் நிகழ்ச்சி நடக்கிறது. தைத்தேர் திருவிழாவின் நிறைவு நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளி உத்திர வீதிகளில் வலம் வருவார்.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில், அர்ச்சகர்கள், ஸ்தானீகர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


Next Story