10, 12-ம் வகுப்பு இணை சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்


தினத்தந்தி 22 Feb 2023 7:15 PM GMT (Updated: 22 Feb 2023 7:15 PM GMT)

தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்பு இணை சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வருகிற 28-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்

தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்பு இணை சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வருகிற 28-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இணையான சான்றிதழ்

8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள் 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 10-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள் 11 மற்றும் 12-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடங்களில் தேர்ச்சி பெற்றால் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்களாக...

அதனைத் தொடர்ந்து, அரசு தேர்வுகள் இயக்ககத்தால் ஆகஸ்டு-2022-ல் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி விண்ணப்பதாரர்கள் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ வருகிற 28-ந் தேதிக்குள் (செவ்வாய்க்கிழமை) விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன் அடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story