சித்தப்பா கத்தியால் குத்திக்கொலை


சித்தப்பா கத்தியால் குத்திக்கொலை
x

ராசிபுரத்தில் குடும்ப தகராறை தடுக்க சென்ற சித்தப்பாவை கத்தியால் குத்திக்கொலை செய்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

ராசிபுரம்

கணவன்-மனைவி தகராறு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் எல்.ஐ.சி. காலனி பகுதியை சேர்ந்தவர் சடையன். இவருடைய மகன் விஜயகுமார் (வயது 27), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ரோகிணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

விஜயகுமார் அடிக்கடி மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு விஜயகுமார் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அருகில் வசிக்கும் விஜயகுமாரின் சித்தப்பா சேட்டு என்கிற தங்கராஜ் (60) என்பவர் சத்தம் கேட்டு விஜயகுமார் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது ஏன் தகராறு செய்கிறாய் என அவரிடம் கேட்டார்.

அண்ணன் மகன் கைது

மது போதையில் இருந்த விஜயகுமார் ஆத்திரம் அடைந்து அங்கிருந்த கத்தியை எடுத்து சித்தப்பா தங்கராஜை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் தங்கராஜுக்கு வயிறு உள்பட சில இடங்களில் கத்திக்குத்து ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்தபோது தங்கராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை குறித்து தகவல் அறிந்து வந்த ராசிபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது அண்ணன் மகன் விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப தகராறை தடுக்க சென்ற சித்தப்பாவை தொழிலாளி குத்திக்கொலை செய்த சம்பவம் ராசிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story