வாக்குப்பதிவு எந்திரங்களை கணினியில் பதிவு செய்யும் பணி தொடக்கம்


வாக்குப்பதிவு எந்திரங்களை கணினியில் பதிவு செய்யும் பணி தொடக்கம்
x

விருத்தாசலம் சேமிப்பு கிடங்கில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினியில் பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

கடலூர்

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது விருத்தாசலம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 869 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 443 கட்டுப்பாட்டு கருவிகள், 477 வி.வி.பேட் கருவிகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு விருத்தாசலம் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. மேலும் தேர்தலில் பயன்படுத்தப்பட்டது போக உபரியாக இருந்த 783 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 680 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 782 வி.வி.பேட் கருவிகளும் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

பதிவு செய்யும் பணி

இந்நிலையில் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பதற்காக கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் விருத்தாசலத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் கடலூருக்கு இடம் மாற்றம் செய்வதற்கான பணிகள் தொடங்கியது. தற்போது அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் கணினியில் பதிவு செய்யும் பணி நடக்கிறது. இந்த பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது.

கடலூருக்கு அனுப்பப்படும்

இந்த நிலையில் விருத்தாசலம் தாசில்தார் தனபதி, துணை தாசில்தார் வேல்முருகன், கணினி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் விருத்தாசலம் தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு அறையை திறந்தனர். பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களை கணினியில் பதிவு செய்யும் பணிகள் தொடங்கியது. இந்த பணிகள் முடிவடைந்த உடன், அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் கடலூர் சேமிப்பு கிடங்கில் வைப்பதற்காக ஏற்றி அனுப்பப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story