பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் நிலை


பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கும் நிலை
x

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மாநகராட்சி சுகாதார வளாகங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மாநகராட்சி சுகாதார வளாகங்களில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சுகாதார வளாகம்

சிவகாசி மாநகராட்சியில் சிவகாசி நகர் பகுதியில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள பல வீடுகளில் போதிய கழிவறை வசதிகள் கிடையாது. கடந்த 15 ஆண்டுகளாக சிவகாசி நகரில் பல இடங்களில் கழிவறைகளை அரசு கட்டி கொடுத்து வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஏழை தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டு அதனை மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 20 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட சுகாதாரவளாகங்கள் பல கோடி மதிப்பில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. அதில் பல சுகாதார வளாகங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த நிலையில் தற்போதைய மாநகராட்சி நிர்வாகம் சேதமடைந்து காணப்பட்ட பல கழிவறைகளை புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்டுள்ளது.

கட்டணம் வசூல்

சிவகாசி நகர் பகுதியில் தற்போது மாநகராட்சியின் பராமரிப்பில் 60 சுகாதார வளாகங்கள் உள்ளன.. இதில் 3 சுகாதார வளாகங்கள் மட்டும் பொது ஏலம் விடப்பட்டு அதன் மூலம் வசூலாகும் தொகைகள் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மற்ற 57 இடங்களில் உள்ள சுகாதார வளாகங்கள் தனிநபர்களிடம் உள்ளது. இந்த சுகாதார வளாகங்கள் பலவற்றில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று வசூலிக்கப்படும் கட்டண தொகைகள் தனிநபர் வசம் தான் செல்கிறது. ஆனால்ஆண்டு தோறும் பராமரிப்பு செலவு மட்டும் மாநகராட்சியில் இருந்து செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தனிநபர் வசம் உள்ள சுகாதார வளாகங்களை மீட்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


Next Story