பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்


பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

திருவள்ளூர்

12 டி.எம்.சி. தண்ணீர்

சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது இதில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம். கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. என 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

கடந்த ஜனவரி மாதம் பூண்டி ஏரியில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருந்ததால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெறவில்லை. இந்த நிலையில் கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரி நீர்மட்டம் குறைந்தது.

தண்ணீர் திறப்பு நிறுத்தம்

இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி ஆந்திர அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடிதம் எழுதினர். அதன் பேரில் மே மாதம் 1-ந்தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் 3-ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. அதிகப்படியாக வினாடிக்கு 510 கன அடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தற்போது ஆந்திராவில் உள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை அதிகமாக பயன்படுத்தி வருவதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று 85 கனஅடி வந்து கொண்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 29.28 அடியாக பதிவானது. 1.689 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக பேபி கால்வாய் வழியாக 40 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Next Story