புயல் சின்னம் காரணமாக பாம்பன் துறைமுக அலுவலகத்தில் 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்


x

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலால் 7-வது நாளாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம்:

வங்கக் கடலில் உருவாகி இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாகவும், ஒரிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தை தொடர்ந்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் இன்று மாலை 1-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. ஏற்கனவே கடந்த ஒரு வாரத்திற்கு மேலாகவே ராமேஸ்வரம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாகவே காணப்பட்டு வருகின்றது.

இதனிடையே தற்போது புயல் சின்னமும் உருவாகியுள்ளதால் மற்றும் கடல் சீற்றத்தின் வேகமும் அதிகமாகவே உள்ளது. இதனால் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடி, ஏர்வாடி, வாலிநோக்கம், தொண்டி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் 7-வது நாளாக விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகள் கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Next Story