ஆக்கிரமிப்பின் பிடியில் ஓடைகள்


ஆக்கிரமிப்பின் பிடியில் ஓடைகள்
x
தினத்தந்தி 1 Oct 2023 10:15 PM GMT (Updated: 1 Oct 2023 10:15 PM GMT)

கம்பம் பகுதியில் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் குளங்களுக்கு நீர்வரத்து ஏற்படுவதில் சிக்கல் நிலவுகிறது.

தேனி

நீர்வரத்து ஓடைகள்

கம்பத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி நிலங்கள் உள்ளன. மழைக்காலங்களில் மலையில் இருந்து பெருக்கெடுத்து வரும் வெள்ள நீர், ஓடைகள் வழியாக கம்பம்-ஏகலூத்து சாலையில் உள்ள ஆலமரத்துக்குளம், சிக்காலி ஆகிய குளங்களுக்கு வந்து சேரும். பின்னர் குளங்கள் நிறைந்து வடிகால் மூலம் ஓடை வழியாக கம்பம் நகர் வழியாக வீரப்பநாயக்கன்குளத்தை சென்றடைகின்றன.

நீர்வரத்து ஏற்படும் ஓடைகளில் ஆங்காங்கே தடுப்பணை மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் ஆழ்துழை கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மழைக்காலங்களில் ஓடைகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர், நேரடியாக பூமிக்கு செல்கின்றன. இதனால் நீர்மட்டம் உயர்ந்து அப்பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன.

ஆக்கிரமிப்பின் பிடியில்...

இந்தநிலையில் கம்பம் பகுதியில் தனிநபர்கள் இலவமரங்களை வெட்டி, அதன் கிளைகளை நீர்வரத்து ஓடைகளில் போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுபோன்ற ஆக்கிரமிப்பால் தற்போது ஓடைகள் இருந்த சுவடே இல்லாமல் போய்விட்டது. இதனால் மழைக்காலங்களில் ஓடைகள் வழியாக தண்ணீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கும் சூழல் உள்ளது. மேலும் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து வீணாகிறது.

ஓடைகள் ஆக்கிரமிப்பால் குளங்களுக்கும் நீர்வரத்து ஏற்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள ஓடைகளை மீட்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story