போதை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை


போதை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை
x

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் அருகே போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

நாமக்கல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாய் புற்றுநோய்

'கூல் லிப்' எனும் புகையிலையானது வாய்புற்று நோயை ஏற்படுத்தி உயிரையும் கொல்லும் தன்மை வாய்ந்தது. இதில் நச்சுத்தன்மை கொண்ட வேதிப் பொருட்களான நிக்கோட்டீன், கார்பன் மோனாக்சைடு, பென்சீன், ஆர்சனிக் மற்றும் பார்மலின் போன்ற பல்வேறு பொருட்கள் கலந்துள்ளன. இதில் இனிப்பு மற்றும் மிண்ட் சுவையுடன் கலந்து போதையை கொடுக்கின்றது.மாணவர்கள் தங்களைவிட வயதில் மூத்தவர்களுடன் பழகும்போதும் நண்பர்கள் மூலமும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். 'கூல் லிப்' மூலம் வாய் புற்றுநோய் ஏற்படும் என்பதை தெரியாமல் இந்த பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.

கடைக்காரர்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில் பெட்டிக்கடைகள் மற்றும் மளிகைக்கடைகளில் போலீசார் மற்றும் இதர துறைகளுடன் இணைந்து ஆய்வு செய்ததில் கடந்த ஒரு வாரத்தில் 11 கடைகளில் இருந்து தடைசெய்யப்பட்ட 'கூல் லிப்' போதை பொருள் கையகப்படுத்தப்பட்டு, கடை உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பெற்றோர்களும் தங்கள் குழந்தையின் செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். வளரிளம் பருவ குழந்தைகளின் செயல்பாடுகளை கவனித்து அன்புடன் பழகி நேரம் செலவிட வேண்டும். பெற்றோர்கள் அவர்களை நல்வழி படுத்த வேண்டும். அரசுடன் பெற்றோர்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே மாணவர்களை 'கூல் லிப்' போன்ற போதை பொருட்களின் பிடியில் இருந்து வெளியே கொண்டுவரவும், பழக்கத்திற்கு அடிமையாகாமலும் பாதுகாக்க முடியும்.

சட்டப்படி நடவடிக்கை

பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் இடத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்கு 'கூல் லிப்' போன்ற போதை பொருட்கள் விற்பது செய்வது தடைசெய்யப்பட்டு உள்ளது. தடையை மீறி 'கூல் லிப்' போன்ற போதை பொருட்கள் விற்பது தெரியவந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களும் தடைசெய்யப்பட்ட 'கூல் லிப்' போன்ற போதை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வது தெரியவந்தால் உடனடியாக 1098 மற்றும் 9486111098 என்ற எண்களுக்கு தகவல் கொடுக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story