கூட்டுறவு ஆலைக்கு பதிவு செய்த கரும்புகளை வெளிச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை


கூட்டுறவு ஆலைக்கு பதிவு செய்த கரும்புகளை வெளிச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை
x

கூட்டுறவு ஆலைக்கு பதிவு செய்த கரும்புகளை வெளிச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த‌ கரும்பை பிற ஆலைகள் மற்றும் வெளிச் சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :-

வேலூர் மாவட்டம், அம்முண்டி கிராமத்தில் அமைந்துள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு 2022-2023 -ம் ஆண்டு அரவை பருவத்திற்கு 5990 ஏக்கர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 2021-22-ம் ஆண்டிற்கான அரவைப் பருவத்தில் அரவை செய்த அனைத்து கரும்பு விவசாயிகளுக்கும் கரும்பு கிரயத்தொகை நிலுவை ஏதும் இல்லாமல் தமிழக அரசின் நிதி உதவியோடு வழங்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட கரும்பை ஆலை‌ துணை விதிகளுக்கு புறம்பாக எடுத்துச் செல்ல சில இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இது சட்டபடி குற்றமாகும். இதனால் ஆலைக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதுடன் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்த கரும்பை முறைகேடான வகையில் வெளிச் சந்தையிலோ அல்லது வெல்லம் தயாரிக்கும் ஆலைக்கோ விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆலை நிர்வாகத்திற்கும் புகார்கள் வருகின்றன. இவ்வாறு முறை கேடுகளில் ஈடுபடும் சங்கத்தினர்கள், இடைத்தரகர்கள் மற்றும் வெல்லம் காய்ச்சும் ஆலை உரிமையாளர்கள் மீது கரும்பு கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்டத்தின் கீழ்‌ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் ஆலைப்பகுதிக்கு உட்பட்ட பதிவு மற்றும் பதிவு செய்யாத கரும்பை எடுத்து செல்பவர்கள் உரிய கோட்ட கரும்பு அலுவலரிடம் தடையில்லா சான்றிதழ் பெற‌ வேண்டும். அதன்பிறகே தங்களது கரும்பை வாகனங்களில் ஏற்றி செல்ல வேண்டும். அவ்வாறு உரிய ஆவணங்கள் இன்றி கரும்பு ஏற்றிச்செல்லும் வாகனங்களை போலீசார் மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கூறப்பட்டிருந்தது.



Next Story