மயானக்கொள்ளை திருவிழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு


மயானக்கொள்ளை திருவிழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
x

வேலூரில் நடைபெற உள்ள மயானக்கொள்ளை திருவிழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

வேலூர்

ஆலோசனை கூட்டம்

வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் மயானக்கொள்ளை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், செந்தில்குமார் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.

விழாக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.

பின்னர் கூட்டத்தில் போலீசார் விழா கட்டுப்பாடுகள் குறித்து பேசியதாவது:-

மயானகொள்ளை விழாவில் செல்ல உள்ள தேரின் உயரம் அதன் அடிப்பாகம் உள்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மயானக்கொள்ளை சாமி சிலை அமைக்கப்பட்ட வாகனத்தில் தீப்பிடிக்கக்கூடிய வகையில் உள்ள பொருட்களை பயன்படுத்தாமல், மின் சாதனப்பொருட்கள் அனைத்தும் எளிதில் தீப்பிடிக்காத வகையில் உள்ளதா? என தீயணைப்புத்துறையினரின் ஆய்வுக்கு உட்படுத்துதல் வேண்டும்.

மின் திருட்டு

கூம்பு வடிவ ஒலிபெருக்கி அமைப்பது தவிர்த்து, பெட்டி வடிவிலான ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். ஒலி அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் இருக்க வேண்டும். விழாக்குழுவினர் சட்டத்திற்கு புறம்பான வகையில் செயல்படக்கூடாது. மின் திருட்டு செய்யக் கூடாது. நிகழ்விடத்தில் எவ்வித அரசியல் கட்சியினர் பேனர்களோ, மதத்தலைவர்கள் பேனர்களோ வைத்தல் கூடாது.

பொது அமைதிக்கும், பாதுகாப்பிற்கும், மதசார்பின்மைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அவ்வப்போது வருவாய், காவல் துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும். சாமி சிலை ஊர்வலங்கள் நண்பகல் 12 மணிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு 3 மணிக்குள் காவல் துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே பிற மதத்தவர்களின் வழிபாட்டுத்தலங்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

சாமி சிலைகளை 4 சக்கர வாகனங்கள் அதாவது மினி லாரி, டிராக்டர் மூலமாக மட்டுமே ஏற்றிச் செல்லப்பட வேண்டும். மாறாக மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் ஏற்றிச்செல்லக்கூடாது. ஊர்வலத்தில் கலந்து கொண்டு காளி, காட்டேரி நீலி, சூலி, அனுமன் போன்ற பல வேடங்கள் தரித்து பல பிரிவுகளாக ஊர்வலத்தில் கலந்துக்கொள்ளும் பக்தர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் செயல்பட வேண்டும்.

பிற மதத்தினரை...

மயானக்கொள்ளை ஊர்வலத்தில் வரும் பக்தர்கள் மற்ற மதத்தினரை புண்படுத்தும் விதத்தில் ஒலிபெருக்கி அமைத்து, இசை தட்டு முழங்கியோ, பேசியோ, பாடல் இசைத்தோ ஊர்வலத்தில் செல்ல அனுமதி இல்லை. மயானக் கொள்ளை ஊர்வலம் செல்லும் போது ஊர்வலத்தின் இடையிலோ அல்லது ஊர்வலத்தின் கடைசியிலோ செண்டை மேளம், தாரை தப்பட்டை ஆகியவைகளை அடித்துக்கொண்டு ஊர்வலத்தில் வரக்கூடாது. பட்டாசுகளை ஆங்காங்கே வெடிக்கக் கூடாது. ஊர்வலம் ஆரம்பிக்கும் இடத்திலும், சாமி சிலை சேரும் சுடுகாட்டிலும் மற்றும் ஊர்வலம் நின்று பேச அனுமதிக்கப்பட்ட இடத்திலும் பொதுமக்கள், போக்குவரத்து மற்றும் சொத்துக்களுக்கு ஆபத்து ஏற்படாதவண்ணம் வரவேண்டும்.

மயானக் கொள்ளை ஊர்வலத்தில் செல்பவர்கள் பிற மதத்தினரை புண்படுத்தும் வகையிலும் மற்றும் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் போஸ்டர் மற்றும் பேனர்கள் வைக்க கூடாது.

மயானக்கொள்ளை ஊர்வலத்தில் வருபவர்கள் யாரேனும் மது அருந்திய நிலையில் வரக்கூடாது. அவ்வாறு யாரேனும் வந்தால் தேவைப்படும் பட்சத்தில் மதுபோதையில் இருப்பவர்களை அப்புறப்படுத்தி ஊர்வலத்தினை அமைதியாக நடத்திட காவல்துறை தக்க நடவடிக்கை எடுக்கும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.


Next Story