நாகையில், அரசு பணியாளர்கள் வேலை நிறுத்தம்


நாகையில், அரசு பணியாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 28 March 2023 7:15 PM GMT (Updated: 28 March 2023 7:16 PM GMT)

நாகையில், அரசு பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் அரசு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலை நிறுத்த போராட்டம்

மத்திய அரசு வழங்கியதுபோல் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

பொதுவினியோக திட்டத்துக்கு தனித்துறை உருவாக்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் நேற்று அரசு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

இதையொட்டி நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்களின் போராட்டக்குழு மாநில துணை ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் பிரகாஷ், இளமதி, தேவேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு பணியாளர் சங்க தலைவர் வெற்றிச்செல்வன், வருவாய் துறை அலுவலர் சங்க வட்ட செயலாளர் நீலயதாட்சி, மாவட்ட துணைத்தலைவர் ஜெயசீலன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பணியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தாலுகா அலுவலகம், கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

அரசு ஊழியர் சங்கத்தினர்...

நாகை தாசில்தார் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் அந்துவண்சேரல் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்கியது அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் வருவாய்த்துறை சங்க மாவட்ட செயலாளர் தனஞ்செயன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராஜூ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story