திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை - கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு


திருவேற்காட்டில் நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை - கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு
x

திருவேற்காட்டில் உள்ள நர்சிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை

திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரி, விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் இந்த கல்லூரியில் மேல் தளத்தில் விடுதியும், கீழ் தளத்தில் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது.

இந்த கல்லூரியில் ஈரோட்டை சேர்ந்த சுமதி (வயது 19) என்ற மாணவி 2-ம் ஆண்டு நர்சிங் படிப்பு பயின்று வந்தார். நேற்று காலை வகுப்புக்கு சென்று விட்டு மதியம் உணவு சாப்பிடுவதற்காக தனது தோழிகளுடன் விடுதிக்கு வந்தார். தோழிகளை சாப்பிட செல்லுமாறு கூறிவிட்டு தனது அறைக்குள் இருந்தார்.

ஆனால் மாலையில் நீண்டநேரம் ஆகியும் சுமதி அறையில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தோழிகள், அறைக்கு சென்று பார்த்தனர். அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்டநேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த தோழிகள், ஜன்னல் வழியாக பார்த்தபோது சுமதி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக சக மாணவிகள் ஜன்னல் வழியாக அறைக்குள் சென்று சுமதியை மீட்டனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்துக்கும், திருவேற்காடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தற்கொலை செய்த சுமதி உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுமதியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது பெற்றோர், சென்னையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்ததால் அவர்களும் சம்பவம் நடந்த கல்லூரிக்கு உடனடியாக வந்தனர்.

மகளின் உடலை பார்த்து கதறி அழுத அவர்கள், தங்கள் மகள் இறந்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினார்கள். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாணவி சுமதி தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரமா? அல்லது மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? சக மாணவிகளுடன் தகராறு ஏற்பட்டதா? அல்லது கல்லூரி நிர்வாகத்துடன் ஏதாவது தகராறு ஏற்பட்டதா? என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட சுமதியின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து கடிதம் ஏதாவது எழுதி வைத்துள்ளாரா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து சுமதியின் பெற்றோரிடமும், விடுதியில் உள்ள சக மாணவிகளிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதற்காக கல்லூரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நர்சிங் மாணவி சுமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பூந்தமல்லி தாசில்தார் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story