மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10-ம் வகுப்பு மாணவன் பலி


மோகனூர் அருகே  கிணற்றில் தவறி விழுந்து 10-ம் வகுப்பு மாணவன் பலி
x

மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி இறந்தான்.

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி இறந்தான்.

பள்ளி மாணவன்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள பெரியார் நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவருடைய மனைவி கல்யாணி. ஜெகதீசன் இறந்து விட்டார். இவர்களுக்கு பூவரசன் (வயது 15) என்ற மகன் இருந்தான். இவன் மோகனூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று பூவரசன் அந்த பகுதியில் உள்ள ஊர் பொது கிணற்றில் மீன் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் கிணற்றில் இறங்கி படியில் அமர்ந்து மீன் பிடித்ததாக தெரிகிறது. அப்போது பூவரசன் எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்தான்.

விசாரணை

இதில் மாணவனுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் தத்தளித்தவன் சிறிது நேரத்தில் நீரில் மூழ்கி இறந்தான். அந்த வழியாக சென்றவர்கள் இதனை அறிந்து உடனடியாக மோகனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு துறை வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார், தீயணைப்பு வீரர்கள் வந்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பலியான பூவரசனின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் பூவரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மாணவனின் தாய் கல்யாணி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story