ஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி


ஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி
x

ஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து மாணவர் பலியானார்.

தேனி

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் பாலாஜி (வயது 15). இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சிவகுமார் தனது வீட்டின் அருகிலேயே கொட்டகை அமைத்து மாடுகள் வளர்த்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று மாலை பாலாஜி, கொட்டகையில் உள்ள மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்றார். அப்போது கொட்டகையில் மின்விளக்கு எரியாமல் இருந்துள்ளது. இதையடுத்து அதனை சரிசெய்யும் முயற்சியில் பாலாஜி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது மின்விளக்குக்கு வரும் மின்கம்பி அறுந்திருந்ததுடன், சுவிட்ச் போடப்பட்டு இருந்தது. இதனை கவனிக்காமல் மின்கம்பியை மின்விளக்குடன் பொருத்தினார். இதில், பாலாஜி மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பாலாஜியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் பாய்ந்து மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story