எண்ணூரில் ராட்சத அலையில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி


எண்ணூரில் ராட்சத அலையில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி
x

எண்ணூர் கடலில் குளித்து கொண்டிருந்த போது ராட்சத அலையில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக பலியானார்.

சென்னை

ராட்சத அலை

சென்னை எண்ணூர் உலகநாதபுரத்தை சேர்ந்தவர் உமாசங்கர். இவரது மகன் ஜெய்ஆகாஷ் (வயது 15). அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ஜெய்ஆகாஷ் அதே பகுதியை சேர்ந்த நண்பன் கார்த்திக் உடன் எண்ணூர் தாழங்குப்பம் கடற்கரையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது கடலில் தோன்றிய ராட்சத அலையில் மாணவர்கள் இருவரும் திடீரென சிக்கி கொண்டனர். அப்போது அவர் காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! என கத்திக்கூச்சலிடவே, இதைக்கண்ட அப்பகுதியில் இருந்த மீனவர்கள் எண்ணூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பிணமாக மீட்பு

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் அலையில் சிக்கி கொண்ட கார்த்திக்கை மீட்டு, அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பாறையில் அடிப்பட்டு தூண்டில் வலைவில் பிணமாக கிடந்த ஜெய்ஆகாஷ் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நாகையம்மன் நகரை சேர்ந்தவர் அன்பு. இவரது மகன் குட்டி (வயது 22). ஆவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பள்ளிப்பட்டில் உள்ள தனது உறவினரை பார்ப்பதற்கு வேகமாக புறப்பட்டு சென்ற நிலையில், திருத்தணி அடுத்த சிறுகுமி அருகே சாலை வளைவில் எதிர்பாராத விதமாக ஓரத்தில் இருந்த மைல்கல் மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story