தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை 53 சதவீதம் அதிகரித்துள்ளது அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி பேச்சு


தமிழ்நாட்டில்  உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை 53 சதவீதம் அதிகரித்துள்ளது அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி பேச்சு
x
தினத்தந்தி 17 Sep 2023 7:00 PM GMT (Updated: 17 Sep 2023 7:00 PM GMT)

தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை 53 சதவீதம் அதிகரித்துள்ளது என அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி பேசினார்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மகளிர் துறை சார்பில் தமிழக அரசின் வளர்ச்சி திட்டங்களும் சமூக முன்னேற்றமும் என்ற தலைப்பில் அழகப்பா பல்கலைக்கழக கலைப்புல மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மகளிரியல் துறை கருத்தரங்க அரங்கில் நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக மகளிர் துறை தலைவர் பேராசிரியை மணிமேகலை தொடக்கவுரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில்,

தமிழக அரசின் நலத்திட்டங்கள் நீடித்த நிலையான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவின் மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, மகளிர்தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக திகழ்கின்றனர். இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது. தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் செலவினங்கள் அல்ல மக்கள் மீதான முதலீடு. இதன் மூலம் மனிதர்கள் ஒரு மாநிலத்தின் மனித வளமாக மாற்றப்படுகிறார்கள். குழந்தைகள், மாணவர்கள்.பெண்கள் மற்றும் முதியவர்கள் என பலதரப்பட்ட மக்களும் பயன்பெறுகின்றனர். தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 53 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்களே ஆகும். இவ்வாறு கூறினார் .அழகப்பா பல்கலைக்கழகம் மகளிர் துறை உதவி பேராசிரியர்கள் வீரமணி, சிவக்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர். முடிவில் மாணவி கோமதி நன்றி கூறினார்.


Next Story