பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணியை பார்வையிட மாணவ-மாணவிகள் ஆர்வம்


பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணியை பார்வையிட மாணவ-மாணவிகள் ஆர்வம்
x

பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி நடைபெறுவதை பார்வையிட மாணவ-மாணவிகள் ஆர்வமாக வருகை தருகின்றனர்.

புதுக்கோட்டை

அகழாய்வு பணி

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கான அடையாளமும், மனிதர்கள் வாழ்விட பகுதியாக இருந்ததற்கான அடையாளமாக தொல்லியல் சான்றுகள் கிடைக்க பெற்றுள்ளன. தற்போது 15-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் தங்க அணிகலன் உள்பட பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. தொடா்ந்து கோட்டைகொத்தளங்கள் இருந்த இடத்தில் அதன் அமைப்பினை அகழாய்வு பணி சமீபத்தில் தொடங்கி நடைபெறுகிறது.

இந்த நிலையில் வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த அகழாய்வு பணி நடைபெறுவதை பார்வையிட பொதுமக்கள் அதிகம் வருகை தருகின்றனர். அதிலும் குறிப்பாக பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வருகின்றனர். இதற்காக மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் அழைத்து வந்து காண்பிக்கின்றனர்.

மாணவ-மாணவிகள் ஆர்வம்

அந்த வகையில் கொத்தக்கோட்டை பகுதியை சேர்ந்த அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள், சாரண, சாரணியர் இயக்க மாணவர்கள் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு நடைபெறும் இடத்தை பார்வையிட்டனர். அப்போது அகழாய்வு குறித்தும், அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து பொற்பனைக்கோட்டை அகழாய்வு இயக்குனர் தங்கதுரை மாணவர்களிடையே எடுத்துரைத்தார். மேலும் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த அகழாய்வை பார்வையிட நாளுக்கு நாள் பொதுமக்கள் வருகை அதிகரித்தப்படியே உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story