நீல வானம் தினத்தையொட்டிமாணவர்கள் விழிப்புணர்வு பேரணி


நீல வானம் தினத்தையொட்டிமாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 7 Sep 2023 6:45 PM GMT (Updated: 7 Sep 2023 6:45 PM GMT)

நீல வானம் தினத்தையொட்டி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சர்வதேச காற்று மற்றும் நீல வானம் தினத்தை முன்னிட்டு தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணிகள் திட்ட பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி, கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

இதில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் காற்றின் தூய்மையை கெடுக்காதே, வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம், தூய்மையான காற்றை சுவாசித்திடுவோம், வாகன பயணத்தை குறைப்போம், வாயுவின் தூய்மை காப்போம், அசுத்த காற்றை அதிகரிக்காதே, தடுப்போம் தடுப்போம், காற்று மாசுபாட்டை தடுப்போம் ஆகிய வாசகங்கள் அடங்கிய போன்ற விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கட்டுரைப்போட்டி

கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியானது, கச்சிராயப்பாளையம் சாலை, காந்திரோடு, குளத்து மேட்டுத்தெரு, கடைவீதி வழியாக சென்று மந்தவெளியில் முடிவடைந்தது. முன்னதாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கிடையே நெகிழியில்லா தமிழகம் என்ற தலைப்பில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, ஸ்லோகன் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கினார்.

இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர்கள் ராம்குமார், இளையராஜா மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story