மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்


மாணவர்கள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
x

பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கான விடுதிகள்

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கென பள்ளி விடுதிகள் இயங்கி வருகிறது.

அதன்படி,பள்ளி மாணவர்களுக்கு 28 விடுதிகளும், மாணவிகளுக்கு 13 விடுதிகளும், கல்லூரி விடுதிகள் மாணவர்களுக்கு 4 மற்றும் மாணவிகளுக்கு 4 என மொத்தம் 49 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி விடுதிகளில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ-மாணவிகளும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ-மாணவிகள் சேரத் தகுதியுடையவர்கள்.

விடுதிகளில் எவ்வித செலவினமும் இல்லாமல் அனைத்து விடுதி மாணவ-மாணவிகளுக்கு உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படும். 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு 4 இணைச் சீருடைகள் வழங்கப்படும். 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவ -மாணவிகளுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் போன்ற பல்வேறு சலுகைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கலாம்

விடுதிகளில் சேருவதற்கு பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பிடத்தில் இருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். தகுதியுடைய மாணவ-மாணவிகள் விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளரிடமிருந்தோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதிக்காப்பாளரிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.06.2023-க்குள்ளும், கல்லூரி விடுதிகளை பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதிக்காப்பாளரிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் 15.07.2023-க்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கும் போது சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்கள் ஏதும் அளிக்கத்தேவையில்லை. விடுதியில் சேரும் போது மட்டும் இச்சான்றிதழ்களை அளித்தால் போதுமானது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மாணவ- மாணவிகள் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story