திருக்குறள் முற்றோதல் பரிசு பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


திருக்குறள் முற்றோதல் பரிசு பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
x

விழுப்புரம் மாவட்டத்தில் திருக்குறள் முற்றோதல் பரிசு பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம்

இலக்கியங்கள் அனைத்திலும் சிறந்ததும் உன்னதமானதும் மனிதகுலம் அனைத்திற்குமான தன்னிகரற்ற படைப்பு திருக்குறள். அத்தகைய சிறப்புமிக்க அறக்கருத்துக்களடங்கிய திருக்குறட்பாக்களை மாணவர்கள் இளம்வயதிலேயே மனப்பாடம் செய்தால் அவை பசுமரத்தாணிபோல் பதிந்து, நெஞ்சில் நிலைத்து அவர்களது வாழ்க்கைக்கு வழிகாட்டும். தாம் பெறுகின்ற கல்வியறிவோடு, நல்லொழுக்கம் மிக்கவர்களாக மாணவர்கள் உருவாக வழிவகுக்கும்.

எனவே திருக்குறள் முற்றோதல் செய்யும் மாணவ செல்வங்களுக்கு பரிசு வழங்கி பாராட்டுவது மாணவர்களின் நல்வாழ்வுக்கு துணை நிற்பதாக அமையும். அதனை கருத்தில் கொண்டு 2023-2024-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் பாராட்டு மற்றும் பரிசு தலா ரூ.15 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

இதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், திறனறி குழுவினரால் திறனாய்வு செய்து தகுதிபெற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசு பெறுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்பெறுகிறார்கள். திறனாய்வு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2-ம் தளத்திலுள்ள தமிழ் வளர்ச்சித்துறையினரால் நடத்தப்படும். திருக்குறள் முற்றோதல் பாராட்டு, பரிசு பெறுவதற்கான விதிமுறைகள்

1,330 திருக்குறட்பாக்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். இயல் எண், பெயர், அதிகாரம் எண், பெயர், குறள் எண், பெயர் போன்றவற்றை தெரிவித்தல் அதற்குரிய திருக்குறளை கூறும் திறன் பெற்றவராக இருத்தல் வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், திருவள்ளுவரின் சிறப்புப்பெயர்கள், திருக்குறளின் சிறப்புகள் ஆகியவற்றை அறிந்தவராக இருத்தல் வேண்டும்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பள்ளியில் பயில்பவராக இருத்தல் வேண்டும். அரசு, அரசு உதவிபெறும், தனியார், பதின்மப் பள்ளிகள் போன்ற பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பங்கு பெறலாம். தமிழ் வளர்ச்சித்துறையால் வழங்கப்படும் இப்பரிசினை இதற்கு முன்னர் பெற்றவராக இருத்தல் கூடாது. திருக்குறளின் பொருளும் அறிந்திருப்பின் கூடுதல் தகுதியாக கருதப்படும். மேற்குறிப்பிட்டவாறு, திருக்குறள் முற்றோதும் திறன்படைத்த மாணவர்கள் தமிழ் வளர்ச்சித்துறை www.tamilvalarchithrurai.com என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து நிறைவு செய்த விண்ணப்பங்களை விழுப்புரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் 15.10.2023-க்குள் அளித்திடவும். மேலும் விவரங்களுக்கு 9786966833 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story