மரத்தின் அடியில் அமர்ந்து கல்வி கற்கும் மாணவ-மாணவிகள்


மரத்தின் அடியில் அமர்ந்து கல்வி கற்கும் மாணவ-மாணவிகள்
x
தினத்தந்தி 20 Sep 2022 6:45 PM GMT (Updated: 20 Sep 2022 6:45 PM GMT)

கடலாடி அருகே பள்ளி கட்டிடம் சேதமடைந்து காணப்படுவதால் மரத்தின் அடியில் அமர்ந்து மாணவ-மாணவிகள் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம்

சாயல்குடி

கடலாடி அருகே பள்ளி கட்டிடம் சேதமடைந்து காணப்படுவதால் மரத்தின் அடியில் அமர்ந்து மாணவ-மாணவிகள் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடக்கப்பள்ளி

கடலாடி அருகே கிடாக்குளம் கிராமத்தில் 1980-ம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள பள்ளிக்கு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது அப்பள்ளி முழுவதும் இடியும் நிலையில் உள்ளதால் மாணவ-மாணவிகள் கிடாக்குளம் கிராம கண்மாய் அருகே உள்ள மரத்தடியில் கல்வி கற்று வருகின்றனர்.

இதுகுறித்து மாணவ-மாணவிகளின் பெற்றோர் கூறுகையில், இந்த பள்ளியில் கிடாக்குளம், கிடாக்குளம் கொட்டகை, புரசங்குளம் கிராமப் பகுதியில் இருந்து 20 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வகுப்பறை கட்டிடம் இல்லாதது அவர்களின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கிடாக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முழுவதும் இடியும் நிலையில் உள்ளதால் மாணவ-மாணவிகள் தற்போது கிராமத்தின் கண்மாய் கரையில் அமைந்துள்ள கருப்பன் கோவில் மரத்தடியில் பயின்று வருகின்றனர்.

நடவடிக்கை இல்லை

தற்போது மழை பெய்து கண்மாயில் தண்ணீர் அதிகமாக இருப்பதால் அப்பகுதியின் கரையில் மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் மரத்தடியிலும் கல்வி கற்க முடியாத நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கக்கூடிய நிலை உருவாகி வருகிறது.

பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக மாணவ-மாணவிகளுக்கு மழை பெய்யும் முன் தற்போதைக்கு மாற்று கட்டிடமும், விரைவில் புதிய பள்ளி கட்டிடமும் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story