மகளிர் உரிமை திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்


மகளிர் உரிமை திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 11 July 2023 12:31 PM GMT (Updated: 12 July 2023 11:55 AM GMT)

கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துதல் குறித்து மாவட்ட, வட்ட அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துதல் குறித்து மாவட்ட, வட்ட அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் வாரியாக விண்ணப்பங்கள் தகுதியான பெண்களை தேர்வு செய்ய வீடுகள்தோறும் சென்று விண்ணப்பங்கள் வினியோகித்தல் குறித்தும், விண்ணப்பதாரர் கொண்டு வரும் படிவத்தில் இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களைக் கொண்டு உள்ள விவரங்களை பதிவு செய்தல், ஒவ்வொரு ரேஷன் கடை வாரியாக இத்திட்டம் செயல்படுத்த வளாக தேர்வு செய்வது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் தேர்வு நடைபெறும் வளாகத்தில் அடிப்படை வசதிகள் செய்து தருதல், தன்னார்வலர்களைக் கொண்டு விண்ணப்பதார்களுக்கு உதவுதல் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இத்திட்டத்தை மேற்பார்வை செய்ய மாவட்ட அளவிலான குழு, வட்ட அளவிலான, மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கவும், சட்டம் -ஒழுங்கு, மருத்துவ வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இந்த திட்ட செயலாக்கம் குறித்தும் துறை வாரியாக பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

முன்னதாக திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனாளிகளின் விண்ணப்பங்கள் மொபைல் மூலமாக பதிவேற்றம் செய்வது தொடர்பாக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு கலெக்டர் முன்னிலையில் பயிற்சி வகுப்பு நடந்தது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, செய்யாறு சப்- கலெக்டர் அனாமிகா, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சையித் சுலைமான் உள்பட மாவட்ட, வட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

==========


Next Story