சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா


சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 25 Oct 2023 7:30 PM GMT (Updated: 25 Oct 2023 7:30 PM GMT)

ஊட்டியில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

நீலகிரி

ஊட்டியில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கோவில் புனரமைப்பு

நீலகிரி மாவட்டத்தின் தலைநகரான ஊட்டியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட காந்தல் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு சுவாமி அமர்ந்த நிலையில் பெருஞ்சித்தராக தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் மிகவும் பாழடைந்து காணப்பட்டது.

தற்போது கோவில் புனரமைக்கப்பட்டு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 21-ந் தேதி நன்மங்கல இசையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 22-ந் தேதி விநாயகர் வழிபாடு, சுதர்சன-மகாலட்சுமி ஹோமம், 23-ந் தேதி வேத பாராயணம், திருமுறை பாராயணம், முதல் கால வேள்வி, மூலிகை சமர்ப்பணம், எண் வகை மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

இதையடுத்து நேற்று முன்தினம் இரண்டாம் கால வேள்வியும், நேற்று சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகமும் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோவில் தலைமை அர்ச்சகர் சரவணன், காந்தல் சுப்பிரமணிய சுவாமி கோவில் அர்ச்சகர் வேலுசாமி பண்டாரம் ஆகியோர் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி நடத்தி வைத்தனர். அப்போது அங்கு திரளாக கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

அன்னதானம்

இதில் கணேஷ் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார், செயல் அலுவலர் ஜெகநாதன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கண்ணன், முருககுமார், கண்ணம்மா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தெய்வீக அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.


Next Story