விவசாய கழிவுகளில் இருந்துதேநீர் கோப்பை தயாரிக்க மானியம்


விவசாய கழிவுகளில் இருந்துதேநீர் கோப்பை தயாரிக்க மானியம்
x
தினத்தந்தி 13 March 2023 7:30 PM GMT (Updated: 13 March 2023 7:31 PM GMT)
நாமக்கல்

விவசாய கழிவுகளில் இருந்து தேநீர் கோப்பை தயாரிக்க மானியம் விடுவிப்பு தொகையாக ரூ.7 லட்சத்து 63 ஆயிரத்தை தொழிற்குழுவினருக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 242 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ரூ.7.63 லட்சம் மானியம்

தொடர்ந்து வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் திருச்செங்கோடு தாலுகா, பட்லூர் தொழிற்குழுவினருக்கு விவசாய கழிவுகளில் இருந்து தேநீர் கோப்பை (டீகப்) தயாரிக்கும் தொழில் தொடங்குவதற்கு மானிய விடுவிப்பு தொகையாக ரூ.7 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பிலான வங்கி வரைவோலையினை கலெக்டர் வழங்கினார். மேலும், கலெக்டரின் விருப்புரிமை நிதியின் கீழ் மாற்றுத்திறனாளி மங்கையர்கரசிக்கு ரூ.5 ஆயிரத்து 600 மதிப்பிலான தையல் எந்திரம் வழங்கினார்.

பின்னர் கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று, துறை அலுவலரிடம் வழங்கி அவற்றின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுலவர் மணிமேகலை, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளார் (பொது) சிவசுப்பிரமணியன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story