கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் "திடீர்" தாழ்வு - படகு போக்குவரத்து தாமதம்


கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் திடீர் தாழ்வு - படகு போக்குவரத்து தாமதம்
x

படகு போக்குவரத்து தாமதமானதால் படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் திடீரென தாழ்வானதால் படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கப்பட்டது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

இவற்றை பார்வையிடச் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த3 படகுகளும் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பவுர்ணமி முடிந்த நிலையில் இன்று காலை கடல் நீர் மட்டம் "திடீர்" என்று உள்வாங்கி காணப்பட்டது. இதனால் இன்று காலை காலை 8 மணிக்கு தொடங்கவேண்டிய படகு போக்குவரத்து வெகு நேரமாகியும் தொடங்கப்படாமல் இருந்தது. இதனால் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலை முதலே படகுத் துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதனால் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் நின்றபடியே விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்த்து ரசித்ததோடு மட்டுமின்றி தங்களது செல்போன்களில் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்துசென்றனர்.

இந்த நிலையில் காலை 10 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. அதனைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து காலை 10 மணி முதல் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வருகின்றனர்.


Next Story