சென்னையில் திடீர் மழை: சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் மாணவர்கள் ஏமாற்றம்


சென்னையில் திடீர் மழை: சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் மாணவர்கள் ஏமாற்றம்
x

திடீர் மழை கொட்டியதால் சென்னையில் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

சென்னை,

பூமியின் நிழலில் நிலவு கடந்து செல்லும்போது அது சூரியனின் நேரடியான ஒளியைப்பெற இயலாது போய்விடுகிறது. இதனால் நிலவு ஒளி குன்றுவதையே சந்திர கிரகணம் என்கிறோம்.

சந்திர கிரகணத்தின்போது சூரியனின் எதிர்த்திசையில் நிலவு வருவதால் சந்திர கிரகணம் பவுர்ணமியின் போதுதான் தெரியும். நிலவு முழுமையாக பூமியின் முழுநிழல் பகுதியில் மறைவது முழு சந்திர கிரகணமாகும்.

பகுதி சந்திர கிரகணத்தின்போது நிலவின் ஒரு பகுதியில் முழுநிழல் பகுதி படியும். முழு நிழல் பகுதியில் சூரிய ஒளி நேரடியாக படிவதில்லை. எனவே நிலவின் ஒரு பகுதி அதிக இருளாகவும், மற்ற பகுதிகள் குறைந்த இருளாகவும் காணப்படும். இது பகுதிசந்திர கிரகணமாகும்.

திடீர் மழை

பூமியின் நிழல் பெரிய பரப்பில் விழுவதால் சந்திர கிரகணத்தை பூமியின் பெரும்பான்மையான பகுதிகளில் இருந்து நேற்று ஒரே நேரத்தில் காண முடியும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, முழு சந்திர கிரகணம் இந்திய நேரப்படி நேற்று பகல் 2.39 மணிக்கு தொடங்கி மாலை 6.19 மணிக்கு முடிவடைந்தது. இதில் முழு சந்திர கிரகணம் 3.46 மணியில் இருந்து மாலை 5.11 மணி வரை இருந்தது. உச்சபட்சமாக 4.30 மணிக்கு ஏற்பட்டது.

நேற்று மாலை 5.36 மணிக்கு சூரியன் மறைந்து அதற்கு பிறகு மாலை 5.40-க்கு சந்திரன் உதயமானது. ஆனால் அந்தநேரத்தில் சென்னையில் மேக மூட்டம் அதிகரித்து திடீர் மழை பெய்தது.

பார்க்க முடியவில்லை

சென்னை பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்த தொலைநோக்கு கருவி மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களால் கிரகணத்தை காண முடியவில்லை. ஆர்வமுடன் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ஆனால் ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவின் சில பகுதிகள் மற்றும் தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் தெரிந்த சந்திர கிரகணம், பிர்லா கோளரங்கத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஒளிபரப்பப்பட்டது என்று பிர்லா கோளரங்க இயக்குனர் (பொறுப்பு) சவுந்தரராஜ பெருமாள் கூறினார்.

மெரினா கடற்கரையில் ஏமாற்றம்

குறிப்பாக, மாலை 5.38 மணியில் இருந்து மாலை 6.11 மணி வரை சுமார் 40 நிமிடங்கள் வரை கிழக்கு தொடுவானில் பகுதி கிரகணத்தை வெறும் கண்களால் காணலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூடி இருந்தனர். ஆனால் அங்கும் மழை கொட்டியதால் சந்திர கிரகணத்தை பார்க்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

மீண்டும் அடுத்த ஆண்டு அக்டோபர் 28-ந் தேதி தமிழகத்தில் இதுபோன்ற பகுதி சந்திர கிரகணத்தை காணலாம் என்று விஞ்ஞானிகள் கூறினர்.


Next Story