கரும்பு அறுவடை தீவிரம்


கரும்பு அறுவடை தீவிரம்
x

மடத்துக்குளம் பகுதியில் கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருப்பூர்

மடத்துக்குளம் பகுதியில் கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கரும்பு அறுவடை

மடத்துக்குளம் சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டுப் பயிரான கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறை, கூலி ஆட்கள் பற்றாக்குறை, கரும்புக்கு போதிய விலை கிடைக்காத நிலை உள்ளிட்ட காரணங்களால் கரும்பு சாகுபடியில் விவசாயிகளின் ஆர்வம் குறையத் தொடங்கியுள்ளது. தற்போது கரும்பு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

'மடத்துக்குளம் மட்டுமில்லாமல் சுற்று வட்டார தாலுகாக்களில் நடைபெற்று வரும் கரும்பு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான கரும்பு விவசாயிகள் இந்த ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வழங்கி வந்தனர். இதனால் கரும்புக்கு சீரான விலை, நிரந்தர வருமானம் என்ற நிலை இருந்ததால் பல விவசாயிகள் ஆர்வமுடன் கரும்பு சாகுபடி செய்து வந்தனர்.

இந்த நிலையில் சர்க்கரை ஆலையில் நிகழ்ந்த பல்வேறு குளறுபடிகளால் விவசாயிகளுக்கு பெருமளவு நஷ்டம் ஏற்பட்டது. அதாவது கரும்பு சாகுபடியைப் பொறுத்தவரை நடவு செய்த 8 முதல் 10 மாதங்களுக்குள் அறுவடை செய்தால் மட்டுமே சரியான அளவில் சாறு இருக்கும். ஆனால் உரிய பருவத்தில் அறுவடை செய்ய நடவடிக்கை எடுக்காததால் சாறு வற்றி விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பல கரும்பு விவசாயிகள் கரும்பு சாகுபடியை கைவிட்டு மாற்றுப்பயிர்களை நாடிச்சென்றனர்.

வெல்லம் உற்பத்தி

சில விவசாயிகள் கரும்பை சர்க்கரை ஆலையுடன் ஒப்பந்தம் செய்யாமல், வெளிச்சந்தையில் வெல்லம் உற்பத்தி ஆலைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் உரிய பருவத்தில் அறுவடை செய்ய முடிவதுடன் லாபகரமானதாகவும் உள்ளது. அதே நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வெல்லத்துக்கு சரியான விலை கிடைக்காத நிலை நீடித்து வருவதால் பலரும் வெல்ல உற்பத்தியைக் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

இதே நிலை நீடித்தால் வெல்லம் உற்பத்தியாளர்களும் கரும்பை வாங்கத் தயங்கும் சூழல் ஏற்படும். இதனால் பணப்பயிராகக் கருதப்படும் கரும்பு சாகுபடி படிப்படியாக குறையும் நிலை ஏற்படும். எனவே கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்களை அரசு வகுக்க வேண்டும். குறிப்பாக அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்தி உரிய பருவத்தில், உரிய அளவில் சர்க்கரை உற்பத்தி செய்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும். குளறுபடிகளைக் களைந்து, உரிய பருவத்தில் விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Related Tags :
Next Story